###ஜேக்டோ-ஜியோ
###JAKTO-JIO
#TEACHERS_PROTEST
#விடை_வேண்டும்_ஆசிரிய #பெருமக்களே
அடுத்த மாதம் மாணவர்களுக்கு இறுதி தேர்வு .நேற்றிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளீர்கள்.
அதாவது மாணவர்களுக்கு கற்பிப்பதை நிறுத்தியுள்ளீர்கள்.
உங்கள் போராட்டத்திற்கு ஆயிரம் நியாயம் இருக்கலாம்.
அதை விட பல்லாயிரம் நியாயம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு இருக்கிறது
இன்று
அரசுப் பள்ளியில் படிக்கும் இலட்சக்கணக்கான மாணவர்களில்
ஆகப் பெரும் பகுதியினர் வாழ்வின் அடித்தளத்தில் உழன்று கொண்டிருக்கும் பெற்றோரின் பிள்ளைகள்
தங்கள் பிள்ளைகளை அவர்கள் உங்களிடம் அனுப்பியுள்ளனர்
போராடும் ஆசிரியரில் 99 விழுக்காட்டினர், உங்கள் பிள்ளைகளை உங்களை விட பல மடங்கு ஊதியம் குறைவாக பெறும்
தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் அனுப்பியுள்ளீர்கள்
அவர்களுக்கு
உங்களை விட ஊதியமும் சலுகைகளும் பலமடங்கு குறைவு என்பதோடு வேலைப் பாதுகாப்பும் குறைவு .
அவர்கள் ஒரு போதும் போராட போவதில்லை. அதற்கான கட்டமைப்பு அவர்களுக்கு இல்லை.
அதனால் நீங்கள்
பெற்றபிள்ளைகள் பாதிக்கப்பட போவதில்லை.
ஒரு வேளை
உங்களைப் போலவே,
அவர்களுக்கும் கட்டமைப்பு இருந்து , அவர்களும் போராட்டத்தில் குதித்தால்
அதாவது
தேர்வு நேரத்தில்
உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிப்பதை நிறுத்திக் கொண்டால் உங்கள் மனம்
எப்படி துடிதுடிக்கும்?
இன்னுமொரு கேள்வியும் பொது சமூகத்திலிருந்து உங்கள் முன்வைக்கப்படுகிறது.
இடைநிலை மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பலரும் கூறுவது,
எங்கள் வகுப்புக்கு வரும் பிள்ளைகள் பலருக்கு
தமிழைக் கூட சரியாக படிக்கத் தெரியவில்லை. சாதாரண கூட்டல் கழித்தல் கூட தெரியவில்லை என்பதே.
இதற்கு ஆரம்ப பள்ளி ஆசியர்கள் பொறுப்பில்லையா?
கடமையை செய்யாத அவர்கள் கூறும் காரணம்,
பிள்ளையை அடிக்கக் கூடாதென்றால் எப்படி பிள்ளை சொல் பேச்சு கேட்டு படிக்கும் என்பதே.
ஒவ்வொரு வகையான பிள்ளையையும் எப்படி படிக்க வைக்க வேண்டும் என்ற பயிற்சி ஆசிரிய பயிற்சியி லேயே கொடுக்கப்படுகிறது.
படிக்காத பிள்ளையின் ஆசிரியர் ,
அதற்கான தகுதியற்றவர் என்று தகுதி நீக்கம் செய்து விட சங்கங்கள் சம்மதிக்குமா?
இன்றைக்கு
அரசுப் பள்ளியில் மாணவர் விகிதம் சரிந்து வருவதற்கு
ஆசிரியர்கள் காரணமேயில்லையா?
அங்கொன்றும்
இங்கொன்று மாக
சில அர்பணிப்பான
தலைமையாசிரியர்களால்
சிறப்பாக நடத்தப்படும் பள்ளிகளை
மக்கள் கொண்டாடுகிறார்களே.
சீர் கொண்டு கொடுக்கிறார்களே.
அப்படியென்றால்
மற்ற பள்ளிகள்
அப்படி இல்லையென்று தானே பொருள்?
கடமையை செய்வோம் கலங்காமலே
உரிமையை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே என்றல்லவா நீங்கள் கொடி பிடித்திருக்க வேண்டும்?
முதல் பாதியை விட்டு விட்டு இரண்டாம் பாதிக்கு நின்றால் பொதுசமூகம் உங்களை எப்படி பார்க்கும்?
தெய்வத்திற்கு முன்
உங்களை வைத்த சமூகத்திற்கு
நியாய உணர்வோடு நீங்கள் நடக்கிறீர்களா ?
மொழியுணர்வு
சூழலுணர்வு
மாந்தவுணர்வு
எல்லாம் போன தலைமுறை ஆசிரியர்களால் இந்த சமூகத்திற்கு ஊட்டப்பட்டது.
ஆசிரியர்கள் அப்போது பொருளியல் போதாமையில் இருந்தனர்
இப்போது
உங்களுக்கு
குறைபாடுகள் இருக்கலாம்.
போதாமைகள் இல்லை.
ஆனால்
போன தலைமுறை ஆசிரியர்களிடம் இருந்த உயர்ந்த விழுமியங்கள் உங்கள் எல்லோரிடமும் இருக்கிறதா?
அவரவர்
அவரவர் நெஞ்சை தொட்டு பதில் சொல்லுங்கள்?
மீண்டும் சொல்கிறேன்.
உங்கள் போராட்டத்தில் நியாயம் இருக்கலாம்.
போராட உங்களுக்கு உரிமையும் இருக்கிறது.
ஆனால்
உங்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட போவது அரசல்ல.
இரத்தமும் சதையும்
உணர்வும் உயிரும் கொண்ட இலட்சக்கணக்கான இளம் ஏழைபிள்ளைகள்.
ஆளும் அரசில் இருப்பவர்கள் அறவாணர்கள் அல்ல. உங்கள் போராட்டத்தை கண்டு பதைபதைத்து போக .
உங்கள் உரிமைகளை விட
எதிர்கால தலைமுறையின் நலமே முகாமையானது.
அதற்கு பாதிக்காத வகையில் உங்கள் போராட்ட வடிவங்களை வடித்துக் கொள்ளுங்கள்.
போற்றுதலுக்குரிய
ஆசிரியப் பணியின் மேன்மையை
பொது சமூகத்தின்
தூற்றுதலுக்குரியதாய் ஆக்கி விடாதீர்கள்.
அவ்வாறு
ஆகிவிடுவதன் இழப்பு
முழுமையாக உங்களுக்குத்தான்.
நுனி மரத்திலமர்ந்து
அடிமரத்தை வெட்டுவது
அறிவுடைமையாகுமா ஆசிரியப் பெருமக்களே?
*#சிந்திப்பீர்*
No comments:
Post a Comment