பூக்களை பறித்துவிடுங்கள்!
==================***
"பூக்களை பறிக்காதீர்கள்"
வாசகத்தைப் படித்தவன்
வேட்கையுடன்
வேரோடு பிடுங்கினான் செடியை!
காட்டினான் நாட்டை
ஆள்வோரின்
நாணயத்தின்
நிலையை!
பிச்சிப்பூவை சூடி
மகிழலாம் பூவை
பிச்சி சூட
இயலுமா?
வனப் பூ மலர்ந்தால்
என்ன?
வாடி கீழே
விழுந்தால் என்ன?
என்னவளின் கருங்கூந்தலின்
வனப்பு காணாதபோது!
காற்றானாலும்
நாற்றானாலும்
நிலவானாலும்
நீரானாலும்
பூவானாலும்
பூவையரானாலும்
இடம் மாறினால்தான்
பலவற்றிற்கும் அழகு!
பறித்தால்தான்
பயன்தரும் பூக்கள்
பிறர் நெஞ்சை
முறித்தால்தான்
பயனடைவர்
கீழ் மாக்கள்!
இறை மீது
தலைவன் மீது
என் மனம் விரும்பும்
எழிலால் மீது
பிணமான பின்
என் உடல் மீது
பூக்கள் விழ வேண்டுமெனில்
முதலில் அவை
பறிக்கப்பட வேண்டும்!
நறுமணம் வீசா
பூவினமும்
திருமணம் ஆகா
பூவையரும்
ஒதுக்கப்படுவதில்
உடன்பாடில்லை
எனக்கு!
பறித்த பூக்களும்
பதறியடித்தே
பதுங்குகின்றதே
கைம்பெண்களை அவை எவ்வாறு அடையாளம்
கண்டு கொள்கிறது?
இனம் இனத்தோடு
சேரவில்லையே!
கதிரவனைக் கண்டு
களிப்புறும் கமலமும்
வெண்ணிலவைப்
பார்த்து மகிழ்வுறும்
அல்லியும்
மாலையில் மலரும்
மணமிகு முல்லையும்
தூரத்தில் இருப்பின்
கண்டு மகிழலாம்
கைக்கு வந்தால்தானே
முகர்ந்து உணரலாம்!
வனமலர்கள் பெரும்பாலும்
மனிதர்க்கு பயன்படுவதில்லை
மனமில்லா மாந்தரைப்போல
வனம் உலாவும்
வானம்பாடியைப்போல!
வாழ்க்கையின் அழகே
கொடுப்பதில்
பூக்களின் சிறப்பே
பறிப்பதில்
பூவையர் பெருமையோ
சிரிப்பதில்
பூமியில் நல்லென
நினைப்பதில்!!
-பாழலர் சு.சன்முக சுந்தரம்
புதுவை.
No comments:
Post a Comment