Saturday, June 16, 2018

நாயுருவி செடியின் மகத்துவம்

 நாயுருவி



மூலிகை :- நாயுருவி

இதற்க்கு ஆடை ஒட்டி மூலிகை என்ற பெயரும் உள்ளது. மிகவும் அறிந்த மூலிகை , அறியாத பல செய்திகள். இது ஒரு வசிய மூலிகையாகும்

முறையாக மூலிகையை எடுத்தால் மட்டுமே சித்திக்கும். நாய் கடிக்க வந்தால் இந்த மூலிகையை நாயிடம் போட்டால் நாய் நம்மிடம் கிட்ட வராது .

சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் நாயுருவி...

இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு. மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, கொஞ்சங் கொஞ்சமாய் அந்தப் பாறையில் துளையிட்டு, பாறைக்கு மேலே வளர்ந்து விடும். இந்தத் தன்மையைக் கொண்டே சித்தர்கள் நாயுருவியை மருந்தாக்கினர்.

அதாவது, நம் உடலில் உண்டாகும் கட்டிகள், கழலைகள் போன்றவற்றை நாயுருவி குணப் படுத்தும் என்று நம்பி, நாயுருவியை மருந்தாக்கினர். சிறுநீரகத்தில் உண்டாகும் கட்டி , கற்கள்  போன்றவற்றை குண மாக்கும் தன்மை நாயுருவிக்கே உள்ள தனிச்சிறப்பாகும்.

நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் அனைத் தும் தீரும்.

சித்தர்கள் அருளிய சிறுநீரகம் காக்கும் சிறப் பான மருந்தினைக் குறிப் பாய் வரைகிறேன்.

நாயுருவி வேர், சிறுபீளை வேர், சாரணை வேர், சிறுகீரை வேர், சிறு நெருஞ்சில் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து பால் விட்டு அவித்து உலர்த்திக் கொள்ளவும். பின்னர் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் காலை- மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டுவர, சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை அதிசயமாய் குணமாகும்.

சிறுநீரக நோய்கள் பல வருடங்களுக்கு முன்பே அதன் அறிகுறிகளைக் காட்டும். அதை நுட்பமாய் உணர்ந்து சித்தர்கள் அருளிய மருந்துகளை மிகச் சிரத்தையுடன் உட்கொண்டு வந்தால், சிறுநீரகம் செயல்படும் திறனை ஒழுங்குபடுத்தி விடலாம். வரும்முன் காக்க வள மையான மருந்துகள் சித்த மருந்துகள் மட்டுமே!

காய்ச்சல் விலக...

நாயுருவி இலையை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து, அத்துடன் பத்து மிளகு, சிறிது வெல்லம் சேர்த்து விழுதாய் அரைத்துச் சாப்பிட, அனைத்து வகையான காய்ச்சல்களும் விலகும்.

தீவிரமான காய்ச்சல் தகிக்கும்போது, நாயுருவி இலையை சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, நீரை வெதுவெதுப்பாய் அடிக்கடி பருகி வர, காய்ச்சல் படிப்படியாகத் தணியும்.

வயிற்றுவலி விலக...


நாயுருவி இலைச்சாற்றுடன் துளி பெருங் காயம் சேர்த்துச் சாப்பிட, வயிற்றுவலி உடனே விலகும். இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி சாப்பிட்டு வர, முறையற்ற மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும்.

வெள்ளைப் படுதல் குணமாக...


நாயுருவி இலைச்சாற்றில் கடுக்காய்த் தூள் இரண்டு கிராம் அளவில் சேர்த்துச் சாப்பிட்டு வர, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் உடனே குணமாகும். மேலும் பெண்களின் மர்மப் புண்களும் ஆறும்.

மூலநோய் குணமாக...


உள்மூலம், வெளிமூலம், கீழ்மூலம், ரத்த மூலம் போன்ற மூலநோயின் அனைத்து வகைகளையும் குணப்படுத் தும் அற்புத மூலிகை நாயுருவியாகும். இன்றும் கிராமங்களில் ரத்த மூலத்தை உடனே நிறுத்த நாயுருவியையே மருந் தாக்குகின்றனர்.

நாயுருவி இலைச்சாறு 60 மி.லி. எடுத்து சிறு பாத்திரத்தில் இட்டு காய்ச்சி சுண்ட வைத்து, அதில் இரண்டு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பின்னர் இரண்டு சின்ன வெங்கா யத்தையும் நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டு நாட்டுக் கோழி முட்டையை உடைத்துச் சேர்த்து நன்கு கிளறவும். இதனைச் சாப்பிட, மூலத்தில் உண்டாகும் ரத்தக் கழிச்சலானது உடனே தீரும்.

வெட்டுக் காயங்கள் ஆற...


நாயுருவி இலையை 100 கிராம் அளவில் அலசி எடுத்து, அதை 500 மி.லி. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சவும். எண்ணெய் நன்கு சூடாகி கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி ஆற வைத்து, எண்ணெயில் உள்ள இலைகளை விழுதாய் அரைத்து மீண்டும் எண்ணெயிலேயே கலந்து விடவும். இந்த எண்ணெயைப் பூசி வர, புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள் போன்றவை உடனே ஆறும்.

உடல் இரும்பைப்போல் உறுதியாக...


நாயுருவி அரிசியை முறைப்படி சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பைப்போல் உறுதியாகும் என்று சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.

50 கிராம் நாயுருவி அரிசியைச் சாப்பிட்டால் இரண்டு வேளை பசியைத் தாங்கும் சக்தி கிடைக்கிறது. நாயுருவி மிகத் திறனுள்ள ஒரு உணவாகும்.

மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு ஆகியன உண்டாகும்.

நாயுருவி வேரும் நேர்மறை சக்தியும்..


நாயுருவிக்கு "மாமுனி' என்றொரு பெயருண்டு. மாமுனி என்பது மகாசித்தனைக் குறிப்பதாகும். அஷ்டமா சித்துகளையும் முறையே பயின்று பரம் பொருளோடு கலக்கும் வல்லமை மாமுனிகளுக்கு உண்டு. இறை தேடும் பண்டைய சித்த மரபினர் நாயுருவி வேரால் தங்களது பற்களைத் துலக்கி வந்துள்ளனர். அதுவும் நாயுருவியின் வேர் களிலேயே வடக்கு நோக்கிச் செல்லும் வேருக்கு விசேஷ சக்தி இருப்பதாய் நம்பப்படுகிறது.

நாயுருவி வேரால் பல் துலக்கி வர, வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். நம் பண்டைய தமிழ் சமூகம், நாயுருவி வேரை மைபோல் செய்தும் உபயோகித்து வந்துள்ளது.

நாயுருவி வேரை பால் விட்டவித்து உலர்த்தித் தூள் செய்து கொண்டு, தினசரி இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மன நோய்கள், மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு, சித்தபிரம்மை போன்ற குறைபாடுகள் முற்றிலுமாய் விலகும். நாயுருவி வேர் மிக வசித்துவம் தரும்.

கோவில் மற்றும் வீடுகளில் வளர்க்கும் யாகத்தில்கூட ஆலங்குச்சி, அரசங்குச்சி, நாயுருவிக் குச்சி போன்றவற்றையே உபயோகிக்கி றோம். இதன் காரணம் என்னவெனில், இவற்றை யாகத்திலிட்டு பூஜை செய்து, மந்திரங்களை ஜெபிக்கும்பொழுது, பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் ஈசனின் ஆசியை ஈர்த்து, நமக்குத் தருவதாய் நம்பப்படுகிறது.

நீங்கள்கூட நாயுருவி வேரால் 48 நாட்கள் தொடர்ந்து பல் துலக்கிப் பாருங்கள். உங்கள் முகம் தேஜஸ் அடையும்; அழகு பெறும். வார்த்தைகள் நளினமாய் வெளிப்படும். உங்கள் பேச்சை ரசிக்கவும் ஒரு கூட்டம் உருவாகும். நேர் மறைச் சக்தியின்  ஒட்டுமொத்த உருவமும் நீங்களாகி விடுவீர்கள்.


த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன் 

No comments:

Post a Comment