கீரைகள் குறித்து வெளிநாட்டில் உள்ளவரின் கருத்து
தமிழ்நாட்டில் கிடைக்கிற அளவுக்குக் கீரை வகைகள் உலகில் வேறேங்கும் கிடைப்பது மாதிரித் தெரியவில்லை. வெளிநாடு என்ன? பிற இந்திய மா நிலங்களிலேயே கூட இத்தனை கீரை வகைகளை அறிந்து உண்பவர்கள் எவரும் இல்லை என்றே நினைக்கிறேன்.
நான் சிகந்திராபாத்தில் இருந்த காலங்களில் வீடுகளில் முருங்கை மரங்கள் பேய் மாதிரி வளர்ந்து நிற்கும். தெலுங்கானாவாசிகள் முருங்கைக்காயை மட்டுமே உண்பவர்கள். தங்கள் வீடுகளிலிருந்து கூடை, கூடையாக முருங்கைக் கீரையைப் பறித்துச் செல்கிற தமிழர்களை விசித்திரமாகப் பார்ப்பார்கள்.
அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பசலைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சக்கரவர்த்திக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை....என வகை வகையான கீரைகள் வளருமிடம் தமிழ்நாடு மட்டும்தான்.
அதன் மண்ணும், சீதோஷ்ணமும் இதற்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம். இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் தமிழர்களின் தினப்படி உணவில் கீரையில்லாமல் இருக்காது. கொத்தவால்சாவடிக்குப் பக்கத்தில் வசித்த எங்கள் வீட்டில் தினப்படி ஒரு கீரைதான். பதினைந்து பைசாவுக்கு ஒரு கட்டு. நிறைய கிழவிகள் விடிகாலை நேரத்திலேயே கூடையைத் தூக்கிக் கொண்டு எங்கள் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.
இன்றைக்கு அவையெல்லாம் மாறிவிட்டதாக நினைக்கிறேன். நகர்ப்புறங்களில், விதிவிலக்குகள் தவிர்த்து, பெரும்பாலான வீடுகளில் கீரை சமைப்பதில்லை. கிராமங்களில் இன்னும் அந்தப் பழக்கம் இருக்கலாம் என்றே நினைக்கிறேன்.
சென்ற முறை இந்தியா வந்திருந்த போது யார் வீட்டிலாவது முருங்கைக் கீரைப் பொறியல் செய்து போடமாட்டார்களா என்கிற ஏக்கமே வந்துவிட்டது. வாய்விட்டுக் கேட்கவும் முடியாது. கடைசி வரைக்கும் முருங்கைக்கீரைப் பொறியல் தின்னாமலேயே திரும்பி வந்தேன் என்கிற சோகச் செய்தியை இங்கு வருத்துத்துடன் பதிகிறேன்.
இன்றைக்கு ஒரு இண்டர்நேஷனல் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். தள தளவென்று முருங்கைக் கீரை வைத்திருந்தான். ஹவாயில் விளைந்தது. வரியுடன் சேர்த்து எட்டரை டாலர் (ஏறக்குறைய 550 ரூபாய் ஒரு கட்டு). விட்டேனா பார் என்று வாங்கி வந்து வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன்.
திட்டினாலும் பரவாயில்லை, நீ பொறியலைச் செய்து போடு என்று காலடியில் சரண்டராகி விட்டேன். வேறே வழி?
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்?
No comments:
Post a Comment