கலைஞரும்,நானும்.
இப்படிக்கு -மு.களஞ்சியம்
கலைஞரின் குறளோவியத்தை காட்சிப் படுத்த வேண்டும் என எனது நண்பர் சிவா எனகிற சிவ்ஜியும் நானும் திட்டமிட்டோம்.
அதற்காக குறளோவியம் வாங்கிப் படித்தேன்.படித்து முடித்ததும் கலைஞர் அவர்களை நினைத்து மிரண்டு போனேன்.ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை சொல்லி விளக்கி இருந்தார்.
நான் எனக்கு பிடித்தமான கதைகளை படமாக்க தேர்வு செய்து கொண்டேன்.
அடுத்து கலைஞர் அவர்களை சந்திக்க வேண்டும்.எப்படி சந்திப்பது?
அப்போது கலைஞர் அவர்களோடு நெருக்கமாக இருந்த அய்யா சின்னக் குத்தூசி அவர்களை எனக்குத் தெரியும்.ஆகவே அவரைப் பார்த்து விவரத்தைச் சொன்னேன்.
அவர் "கலைஞர் அவர்களிடம் கேட்டுச் சொல்லுகிறேன் நாளை வாருங்கள் "என்றார்.
அடுத்த நாள் நானும், சிவாவும் சின்னக்குத்துசி அய்யாவை பார்க்கச் சென்றோம்.
"கலைஞர் ஒத்துகிட்டார்.சந்திப்புக்கான நேரம் சொல்லுவாங்க ..." என்று சின்னக்குத்தூசி அய்யா சொன்னார்.
அன்று இரவு எட்டு மணி இருக்கும் எனது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
"கலைஞர் ஐயாவை சந்திக்க நேரம் கேட்டிருந்திங்களா? "என்று ஒருவர் கேட்டார்.
"ஆமாம்..." என்றேன்.
"நாளைக் காலை 11-மணி.இடம் கோபாலபுரம்" என்று சொன்னார்.
அடுத்த நாள் காலை சரியான நேரத்துக்கு கோபாலபுரம் வீட்டிற்கு சென்றோம். வரவேற்பறையில் நிறைய பேர் காத்திருந்தார்கள். நாங்களும் உட்காரவைக்கப்பட்டோம்.
கொஞ்ச நேரத்தில் அய்யா சன்முகசுந்தரம் அவர்கள் மாடியில் இருந்து இறங்கி வந்தார்.அனைவரும் எழுந்து நின்றோம். .என் பெயரைச் சொல்லி அழைத்தார்.நான் அருகில் சென்றேன்.என்னையும் சிவாவையும் அழைத்துக்கொண்டு மேலே போனார்.
ஒரு மாடி தான்.எதிரே கலைஞர் அவர்கள் தக தக வென தங்கம் போல அமர்ந்திருந்தார். நான் கும்பிட்டேன். அவரும் கும்பிட்டார். பிறகு சிவாவிடமிருந்து பூங்கொத்தை வாங்கிக் கொடுத்தேன்.
அடுத்து அவர் சொன்னதுதான் தூக்கி வாரிப் போட்டது.
"வாய்யா முக... நீயும் முக...நானும் முக. என் அப்பா பேரு முத்துவேலாளர்...ஒங்க அப்பா பேரு?" என்று கேட்டார்.
"முனியாண்டி அய்யா" என்றேன்.
"ஊரு பாப்பநாடு தானே?..."
அதிர்ச்சியில் " ஆமாங்கய்யா" என்றேன்.
"உங்க ஊரல அந்த திருமேனியம்மன் திருவிழா நடக்குதா இல்லை இன்னும் சண்டையில தான் கெடக்கா?..."
என்று கேட்டார்.
எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
என்னைப் பற்றி நான் எதுவுமே சொல்ல வில்லை.அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்.நான் அவர் கையால் இரண்டு தடவை மாநில விருது வாங்கி இருக்கிறேன்.(பூமணி,கிழக்கும் மேற்கும்)அதையும் நினைவு கூர்ந்தார்.
இப்படியாக,குறளோவியம் குறித்து பேச அடுத்து அடுத்து ஏழு முறை சந்தித்தேன்.
அந்த நேரம் பார்த்து தேர்தல் வந்தது...
திமுக வென்றது. கலைஞர்
முதலமைச்சர் ஆகி விட்டார்.
தொடர்ந்து சந்திக்க முடியவில்லை.
சின்னக்குத்தூசி அவர்களைப் பார்த்தேன்.
அடுத்த நாள் அதிகாலை முரசொலி அலுவலகத்துக்கு வரச் சொன்னார்.
அங்கு கலைஞர் அவர்களை சின்னக்குத்தூசி ஐயா அவர்களோடு சந்தித்தேன்.
"கொஞ்சம் பொருங்கள் முக...சட்டசபை முடியட்டும் அப்பத்தான் இந்த முக வுக்கு நேரம் ஒதுக்க முடியும்"
என்று நகைச்சுவையாக சொன்னார்.
சரியென நானும் காத்திருந்தேன்.அதுதான் எனது கடைசி சந்திப்பு....
இதற்கிடையில் நான் படிப்பதற்காக ஆஸ்த்ரேலியா சென்று விட்டேன்.
பிறகு,
2009...இறுதியுத்தம்...முள்ளிவாய்க்கால்... ஈழம் சார்ந்த முரண்பாடுகள்....காரணமாக அவர் மீது ஏற்பட்ட அறம் சார்ந்த சினத்தால் நான் விலகி விட்டேன்.
இப்படியாக,
குறளோவிய முயற்சி கைவிடப்பட்டது.
-மு.களஞ்சியம்.
No comments:
Post a Comment