கருணாநிதி உறங்கும் முன்னும்...எழுந்த பின்னும்... பார்ப்பது யார் முகம் தெரியுமா?
கோடிக்கணக்கான தொண்டர்களையும், அபிமானிகளையும் கொண்ட திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்தித்திருக்கலாம். உலக தலைவர்களிலிருந்து அடிநிலை தொண்டன் வரை பல கோடி முகங்கள்.... ஆனால் அவர்களுக்கு யாருக்கும், ஏன் அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் கூட காட்டாத நெருக்கத்தை கருணாநிதி ஒருவரிடம் காட்டினார்... அந்த நபரின் பெயர் தான் நித்யானந்த்
ஆகஸ்ட் 8ம் தேதி மெரினா கடற்கரையில் மணலின் எண்ணிக்கைக்கு ஈடான மக்களின் கண்ணீர் துளிகளுக்கு நடுவே சகாப்த நாயகன் கருணாநிதியின் இறுதி மரியாதை நடைபெற்று கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கட்சி தலைவர்களுக்கு மட்டும் கருணாநிதியின் உடலுக்கு இறுதியாக மரியாதை செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அந்த வரிசையில் வெள்ளை நிற சட்டை அணிந்து வந்த நபர் மரியாதை செலுத்தினார். பார்ப்பதற்கு சாமானியனை போல இருக்கும் இந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்று தெரியாமல் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த பலரும் அந்த துயரமான கட்டத்திலும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். சோகமான இறுகிய முகத்துடன் வந்த அந்த நபர் கருணாநிதியின் உடலை தொட்டு கும்பிட்டு விட்டு சில நொடிகள் சலனமில்லாத பார்வையோடு உடலை பார்த்தார். பின்னர் ஆத்மார்த்தமான ஒரு வணக்கத்தோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அவர் தான் நித்யானந்த்
கருணாநிதியின் கடைசி காலத்தில் அவருக்கு ஆல் இன் ஆல்-ஆக இருந்தவர் தான் நித்யா. இனத்தால் நிறத்தால் பணத்தால் வேறுபாடுகள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலத்தில், அனைவரும் சமம் என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்த கருணாநிதியின் சித்தாந்தத்தின் சாட்சி தான் இந்த நித்யா. அருந்ததியினர் இனத்தை சேர்ந்த நித்யாதான் கடைசி காலத்தில் கருணாநிதிக்கு தாயாக மாறி அனைத்து பணிவிடைகளையும் செய்தார்.
ஆரம்ப காலக்கட்டத்தில் சிறு சிறு வேலைகள் செய்வதற்காக பணியமர்த்தப்பட்ட நித்யானந்த் ஒரு கட்டத்தில் கருணாநிதியின் தவிர்க்க முடியாத துணையாக மாறினார். குறிப்பாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும், கருணாநிதியும் உடல்நலம் நலவடைந்து போன நிலையில் உலக சித்தாந்தத்தை அறிந்திருந்த கருணாநிதியின் உலகமாகவே மாறிப்போனார் நித்யா.
குடும்ப உறவுகளிலிருந்து அமைச்சர்கள் வரை அனைவரும் நித்யாவை தாண்டி தான் கருணாநிதியை அணுக முடியும் என்ற சூழ்நிலை உருவானதாகவும் கூறப்படுவதுண்டு. இந்த நம்பிக்கையை பெற நித்யாவுக்கு பல ஆண்டுகள் ஆனது. ஒருகட்டத்தில் நித்யா சுட்டிக்காட்டும் நபர்கள் தான் உயர்பதவியில் அமர்த்தப்பட்டதாகவும், இதனால் சில மூத்த அமைச்சர்களுக்கு கூட அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகின. இந்த சூழ்நிலைகளில் கூட எதற்காகவும், யாருக்காகவும் நித்யாவை கருணாநிதி என்றும் விட்டு கொடுத்ததே இல்லை. "நித்யா என் சிநேகிதன்" என்று பலமுறை கூறியிருக்கிறார் கருணாநிதி.
மருத்துவமனையில் கருணாநிதி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது, "எப்படியாவது ஐயாவை என்னிடம் மீட்டு கொடுத்து விடுங்கள், அவரை இன்னும் 10 வருடங்களுக்கு மேல் நான் பத்திரமாக பார்த்து கொள்கிறேன்" என்று கண்ணீர் விட்டு அழுதாராம் நித்யா.
நன்றி:
✍ ( மு.இராஜேஷ்)
கருணாநிதியின் மறைவு திமுக தொண்டர்களுக்கு வேண்டுமானால் ஒரு தலைவனை இழந்த உணர்வு கொடுக்கலாம்.... ஆனால் பல ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாக கருணாநிதியை பராமரித்து வந்த நித்யாவிற்கு கருணாநிதியின் இழப்பு ஒரு குழந்தையை இழந்த தாயின் இழப்புடன்தான் ஒப்பிட முடியும்.
இவன்-
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment