Monday, August 13, 2018

வாழ்க்கையோர் பள்ளிக் கூடம்

வாழ்க்கையோர் பள்ளிக் கூடம்


வாழ்க்கையோர் பள்ளிக் கூடம்
வருடமோ நூலாய் ஆகும்;
திங்களோ அத்தியாயம்
தினங்களோ பக்க மாகும்!
மணிகளோ வரியாய் மாறும்
மனிதனின் கதையைக் கூறும்!
நிமிடமோ  வரியின் சொற்கள்
நிலைத்திடும் வைரக் கற்கள்!

நாளெலாம் செய்யும் வேலை
நற்பணி உழைப்பு யாவும்
தாளெலாம் எழுத்தாய் மாறி
தக்கதோர் சரிதம் ஆகும்!
ஆண்டெனும் புத்த கத்தில்
அவையெலாம் பக்கமாகி
மாண்டு நீ மறைந்த பின்னும்
மாண்பினை உலகில் சொல்லும்!

செங்கதிர் நிலவு வானம்
சிந்திசைக் குயிலின் கானம்,
பொங்கிடும் அலையின் சத்தம்,
பூவிடும் வண்டின் முத்தம்,
சங்கொலி முழங்கும் காற்று
சதிசொல்லும் மலையின் ஊற்று!
எங்குமே இயற்கை வள்ளி
இயக்கிடும் இனிய பள்ளி!
   
   ---  பாவலர் இரா..இராஜவேலு

No comments:

Post a Comment