உபா சட்டம் என்பது என்ன?? பகுதி - 1
மிக சமீபத்தில் (ஆகஸ்டு 2018) ஒரே நாளில் 5 சமூக ஆர்வலர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கைதுகள், உபா சட்டம் குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.
உபா என்று அழைக்கப்படும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் என்றால் என்ன? அதில் உள்ள முக்கியப் பிரிவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது.
ஆனால், இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமைகளை வரையறைக்குள் கொண்டு வர இந்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில், 1967-ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
உபா என்று அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் `எது தீவிரவாத நடவடிக்கை’ என்பதற்கான உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.
அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைதுசெய்ய முடியும். ஏறக்குறைய உலகின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட காரல் மார்க்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைக் கூட சில வழக்குகளில் காவல்துறை ஆதாரமாக தாக்கல் செய்துள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 43-ன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் வரை போலீஸ் காவல் வழங்க முடியும். அதிகபட்சமாக ஒரு நபரை 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும். அதேபோல், 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும்.
இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. அதேபோல் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் பிரிவு 43-ன் படி, ஜாமீனில் வெளியே வருவது இயலாத காரியம். இந்தச்க் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியில்லை.
கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த தடா, பொடா போன்ற கருப்பு சட்டங்கள் பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து அரசால் திரும்ப பெறப்பட்டன. அந்தச் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டபின், உபா சட்டத்தில் 2004, 2008 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், தடா, பொடாவுக்கு இணையாக இந்தச் சட்டத்தை மாற்றியுள்ளதாகக் கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
இது குறித்து தொடர்ச்சியை இதன் பகுதி 2ல் காணலாம்
No comments:
Post a Comment