பழங்கள்
மனித இனத்தின் முதல் உணவே பழங்கள்தான்.
பழங்கள் நோய் தீர்க்கும் அருமருந்து. இறைவனால் நமக்கு இயற்கையாக வழங்கப்பட்ட அருட்கொடையாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இலகுவாக ஜீரணமாகக் கூடிய ஒரு உணவு இருக்கின்றது என்றால் அது பழங்கள் தான்.
பழங்கள் நாட்பட்ட நோய்களை நீக்கக் கூடியது. அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யக் கூடியது.
உடலுக்கு நல்ல சக்தியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கக் கூடியது.
பழங்கள் செரிமானமாக அதிக ஜீரண சக்தி தேவையில்லை.
அதனால் தான் ஜீரண சக்தி குன்றியுள்ள நோயாளியை பார்க்கப் போகும் போது பழங்களை வாங்கி செல்கின்றோம்.
பழங்கள் வயிறு, மண்ணீரல், நுரையீரல் மற்றும் கல்லீரலையும் சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, செல் அணுக்கள் மற்றும் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவி அவற்றில் கலந்துள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்கி நம் உள் உறுப்புக்களைப் புதுபித்து நோய்களிலிருந்து பாதுகாக்கும் சக்திகொண்டவை ஆகும்.
இவ்வளவு மகத்துவம் மிக்க பழங்கள் உண்மையிலேயே நம் நலனுக்கு நன்மை அளிக்கின்றதா?
பெரும்பாலும் நன்மை பயக்குவதில்லை என்றே சொல்ல வேண்டும்.
காரணம் பழங்கள் நவீன முறையில் விஷங்களாக்கப் படுகின்றன.
மூன்று வகையில் பழங்கள் நமக்கு தீங்காக அமைகின்றன.
1. விளைச்சலை அதிகரிப்பதற்காக நவீன முறையில் இரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லி மருந்துகளையும் உபயோகித்தல்.
2. மரபணு மாற்றம் செய்யப் படுதல்.
3. நாம் பழங்களை உண்ணும் முறைகள்.
தற்போது கண்களுக்கு கவர்ச்சியாக பளபளப்பான பழவகைகள் அதிக அளவில் கிடைக்கின்றன.
மேலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபட்ட பழங்களும் வித விதமாக கிடைக்கின்றன.
விலை கூடுதலாக இருந்தாலும் கண்களுக்கு கவர்ச்சியாக இருப்பதால் அந்த வகை பழங்களை தான் நாமும் வாங்குகின்றோம்.
தர்பூசணி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் விஞ்ஞான முறையில் மாற்றம் செய்யப்பட்டு விதைகள் இல்லாமல் வருகின்றன. பழங்களில் உள்ள விதைகள் தான் அதன் அடுத்தப் தலைமுறையை நிர்மாணிக்க கூடியது. விதையிலிருந்து தான் செடி, கொடி, மரம் எல்லாம் விருத்தியாகும். விதை இல்லையென்றால் அது மலட்டு தன்மையானதாகும்.
நாம் இவ்வகை பழங்களை சாப்பிடுவதால் நமக்கும் ஆண், பெண் மலட்டு தன்மை ஏற்பட கூடும். எனவே இந்த வகை பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சிறு வயதினருக்கு கொடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.
அதுபோல் இயற்கைக்கு மாறாக பெரிய அளவில் இருக்கும் பழங்களையும் சாப்பிடக் கூடாது. இவைகள் துரித வளர்ச்சிக்காக இரசாயனங்கள் கலக்கப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்டது. (Chemical Indused and Genetically Modified).
மரபணு மாற்றம் செய்யபட்ட பழங்களை சாப்பிடுவதால் ஹார்மோன்கள் குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் சாதாரண சிறு வியாதி முதல் கேன்சர் வரை எந்த நோயும் வரலாம்.
அடுத்து பழங்களை பழுக்க வைப்பதற்காக கார்பைடு கற்கள் மற்றும் எத்திலீன் போன்ற கெமிக்கல்ஸ் உபயோகப்படுத்தப் படுகிறது. பழங்கள் இயற்கையாக பழுத்தால் தான் அது ஆரோக்கியம். அவ்வாறு இல்லாமல் செயற்கையாக பழுக்க வைத்தால் அது வெம்பி போனதிற்கு சமமானது. அது பழமல்ல.
பழங்கள் சாப்பிட்டதும் தொண்டைப் பொருமல், தொண்டையில் கரகரப்பு, இருமல் தோன்றுமானால் அது முறையாக பழுக்காத பழங்கள் ஆகும். இது போன்ற பழங்களை சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறுகள், வயிற்று போக்கு, தொண்டை வலி மற்றும் பித்தம் அதிகரித்து அது சம்மந்தான நோய்கள் ஏற்படும்.
பழங்கள் பழுத்த உடன் அவை இரண்டு மூன்று நாட்களில் அழுகத் தொடங்கி விடும். ஆனால் தற்போது விற்கப்படும் பழங்கள் அவ்வாறு உடனே கெடுவதில்லை.
பழங்கள் விரைவாக கெட்டுப் போகாமல் இருக்க இரசாயனங்கள் கலந்த மெழுகில் முக்கி எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு செய்யும் போது பழங்களின் தோல்களில் உள்ள நுண்ணிய துவாரங்கள் அடைக்கப்படுகிறது. இதனால் பழத்தின் உட்புறத்திற்கும், வெளிப்புறத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப் படுகிறது.
பழுப்பதற்கு முன்னாள் மரத்திலிருந்து ஒரு காயை பறித்துவிட்டால் அதன் வளர்ச்சியும், உயிர் சக்தியும் துண்டிக்கப் படுகிறது. ஒரு காய் பழுப்பதற்கு முன்னாள் அது புளிப்பு சுவையுடன் இருக்கும்.
அவ்வாறு இருந்தும் அந்த காய் எவ்வாறு கனியாகிறது. அதன் சுவையும் எப்படி இனிப்பாக மாறுகி்றது?
ஒரு காய் கனிய வேண்டுமென்றால் அதன் தோல்களில் உள்ள மிக நுண்ணிய துவாரங்கள் மூலம் ஆக்சிஜனுடன் கூடிய இயற்கை பிரபஞ்ச சக்தியும் நுழைய வேண்டும். (Cosmic Energy) அப்போது தான் ஒரு காய் கனிந்து அதன் புளிப்பு சுவையிலிருந்து இனிப்பு சுவையாக மாறும்.
ஆனால் மெழுகு தடவப்பட்ட பழத்தில் துவாரங்கள் அடைக்கப் படுகின்றன. பிரபஞ்ச சக்தி நுழைவது தடைபடுகிறது. எனவே அந்த பழத்தில் மாற்றம் நிகழ தாமதமாகிறது. அதனால் பல மாதங்கள் ஆனாலும் அந்த பழம் கெடுவதில்லை. உயிர் சக்தியற்ற இந்த பழம் இறந்ததுக்கு சமமானதாகும்.
உதாரணமாக மெழுகு தடவப்பட்ட ஒரு ஆப்பிள் பழத்தில் ஒரு பகுதியில் சற்று மெழுகை சுரண்டி விட்டு வைத்து விட்டால் சிறிது நேரத்தில் அந்த இடம் கருத்து கெட்டு போக ஆரம்பித்துவிடும். ஆனால் அந்த பழத்தை அப்படியே வைத்திருந்தால் பல மாதங்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும். இதிலிருந்து அந்த பழதினுள் உயிர் சக்தி ஊடுருவ வில்லை என புரிந்துக் கொள்ளலாம்.
பெரும்பாலும் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சென்று அங்குதான் நல்ல சுத்தமான பழங்கள் கிடைக்கும் என்று நம்பி வாங்குகின்றோம்.
தோல்களில் எந்தவித வடுவும் இல்லாமல் பளீர் என்று பளபளப்பாக இருந்தால் தான் அது நல்ல பழங்கள் என்றும் நாம் நினைக்கின்றோம்.
பழங்களிலேயே தரங்கெட்டது இந்த வகை பளபளக்கும் பழங்கள்தான்.
இயற்கைச் சூழலில் பழுத்த பழங்களின் தோலில் பளபளப்பு இருக்காது. சற்றே மங்கலாக இலேசாக தூசு படிந்தாற்போல் இருக்கும். அவற்றின் தோலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பழுப்பு நிற புள்ளிகள் அல்லது வடுக்கள் இருக்கும்.
ஆனால் பெரிய ஸ்டோர்களில் வாங்கும் பழங்களின் தோலில் பளபளப்பு இருக்கும். வடுக்கள் இருக்காது.
அடுத்தது அரைகுறையாக பழுத்து வெம்பிப் போய் அழுகும் பழங்கள் ஜாம், ஜுஸ் என்று உருத்தெரியாமல் நசுக்கப்பட்டு அழகான பாட்டில்களிலும், அட்டைகளிலும் அடைக்கப்பட்டு 100% பியூர் ஜுஸ் என்று விற்பனைக்கு வருகிறது. அதையும் பெருமையாக வாங்கி குடிக்கிறோம். (நாகரீக மோகம்).
சாலையோரம் விற்கும் தூசுப்படிந்த மங்கலான பழங்களில் கரும்புள்ளிகளும், வடுக்களும் தோல்களில் காணப்படுமானால் அதுதான் நல்ல பழங்கள்.
பழங்களின் மேல் காளான்கள் படரும் போது அது தூசுபடிந்தாற்போல் காணப்படும். இதனால் விட்டமின் சி போன்ற எண்ணற்ற உயிர்ச்சத்துக்கள் அந்த பழங்களில் உருவாகின்றன. பழங்களின் தோல்களை காளான்களும் நுண்ணுயிர் கிருமிகளும் மிருதுவாக்கும் போது பழங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சக்திப் பரிமாற்றங்கள் வேகமாக நிகழப்படுகிறது. அப்பொழுது தோல்களில் கரும்புள்ளி்களும், பழுப்பு நிற வடுக்களும் தோன்றுகின்றது. இவையே உண்ணுவதற்கு ஏற்ற உயிர்ச்சத்துள்ள, ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் நல்ல பழங்களாகும்.
எனக்கு பழங்கள் ஒத்துக் கொள்ளாது, பழங்கள் சாப்பிட்டதும் சளி பிடித்துக் கொள்ளும் என்று சிலபேர் கூறுவார்கள். அவ்வாறல்ல.
பழங்கள் சாப்பிடும் போது அவை நுரையீரலின் செல்களில் தேங்கியுள்ள சளிகளையும், கழிவுகளையும் நீக்கும் வேலையை செய்கிறது. இவ்வாறு வெளியேறும் கழிவுகளைதான் சளி பிடித்துக் கொள்வதாக கூறுவார்கள். இது ஆரோக்கியத்தின் வெளிப்பாடே. நோய்கள் அல்ல. நுரையீரலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியான பிறகு இரண்டு மூன்று நாட்களில் அந்தச் சளி நின்றுவிடும்.
பழங்களை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்?
பெரும்பாலும் உணவு உண்டவுடன் கொஞ்சம் பழங்களை சாப்பிடுவதை நாம் வழக்கமாக வைத்திருப்போம். இது மிகவும் தவறான முறையாகும்.
சமைக்கப்பட்ட உணவு ஜீர்ணமாக சுமார் ஒரு மணி நேரமாகும். ஆனால் பழங்கள் உடனடியாக ஜீரணமாக தொடங்கிவிடும்.
உதாரணமாக பட்டினியிலோ, உண்ணாவிரதத்திலோ இருக்கும் ஒருவருக்கு பழச் சாற்றை கொடுத்தால் அவருக்கு உடனடியாக சக்தி கிடைத்து, புது தெம்பு ஏற்பட்டு முக மலர்ச்சி அடைவதை காணலாம். இதிலிருந்து பழங்கள் செரிக்க அதிக நேரமோ, ஜீரண சக்தியோ தேவையில்லை என புரிந்துக் கொள்ளலாம்.
உணவுடன் பழங்களை சேர்த்து சாப்பிடும் போது அது மற்ற உணவுடன் கலப்பதால் வயிற்றுக்குள் நொதித்தல் ( Fermentation) ஏற்பட்டு கெட்டு போய் புளித்து, வாயுக்கள் உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது. மேலும் பழங்களில் உள்ள சக்தியும், வைட்டமின்களும் உடலுக்கு கிடைப்பதில்லை.
சமைத்த உணவின் அமிலத் தன்மையோடு இயற்கையான பழங்களின் கார தன்மை கலப்பதால் பலவிதமான வயிற்று உபாதைகள் ஏற்படும். எனவே உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள் இன்றிலிருந்து உணவுடன் பழங்கள் சேர்த்து உண்ணுவதை நிறுத்தி விடுங்கள்.
உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அல்லது உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகோ தான் பழங்கள் சாப்பிட வேண்டும்.
இனிப்பான பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். புளிப்பான, துவர்ப்பான பழங்களை குப்பையில் போடுங்கள். இவை உடலுக்கு தீங்கை விளைவிக்கும். உங்கள் கல்லீரலை கெடுக்கும்.
பழங்களை அப்படியே மென்று சாப்பிடுவது மிகவும் நல்லது.
மென்று சாப்பிட முடியாதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பழங்களை
ஜுஸாக கொடுக்கலாம். ஆனால் பழச்சாற்றை தண்ணீர் கலக்காமல் (Concentrated) அப்படியே ஜுஸாக கொடுக்க வேண்டும். தண்ணீர் கலந்தால் அதன் தன்மையும், தரமும் மாறிவிடும்.
குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் தர்பூசணி போன்ற குளிர்ச்சி தரும் பழங்களை இரவில் உண்ணக் கூடாது.
இயற்கையான முறையில் பழுத்த பழங்கள் கிடைத்தால் வாங்கி சாப்பிடலாம். அல்லது செஞ்காய் பதத்தில் பழங்களை வாங்கி வீட்டில் பழுக்க வைத்து சாப்பிடுங்கள்.
மேற்சொன்ன முறைகளில் பழங்களை சாப்பிடும் போது தான் பழங்களின் முழுமையான சக்தியும், நன்மையும் கிடைத்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.
நன்றி.
Dr. Gouse. MD (Acu,Tcm)., Singapore.
மேலும் ஆரோக்கியம் பற்றிய பல தகவல்களை அறிய www.kavimalaravan.blogspot.in ல் இணையுங்கள்.
No comments:
Post a Comment