நோன்பும், மருத்துவமும் - பகுதி - 1
நோன்பு என்பது பல மதத்தவரால் பல விதங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் இஸ்லாமியர்களுக்கு நோன்பு என்பது மிகவும் விசேஷமானது. சிறப்பு மிக்கது. நோன்பு நோற்பது இறைவனின் கட்டளை என்பதால் நோன்பு காலம் நெருங்கிவிட்டால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நோன்பை ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
உடலையும் மனதையும் நோயின்றி வைத்துக்கொள்ளவும், ஆசைகளிலிருந்தும், மன இச்சைகளிலிருந்து விடுதலைப் பெறவும் இறைவன் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பை கடமையாக்கியுள்ளான்.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், தொடர் நோயாளிகள், தள்ளாத வயோதிகர்கள், பயணிகள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் கட்டாயமாக நோன்பு நோற்க வேண்டும் என்பது இஸ்லாமிய கடமையாகும்.
நோன்பை இருப்பதால் மருத்துவ ரீதியாக உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று பார்ப்போம்.
நோன்பு என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இறை குணங்களை உணர்வதற்கும், மனஇச்சைகளை கட்டுப் படுத்துவற்குமான ஒரு பயிற்சி முறையாகும்.
ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல் டீ ,காபி மற்றும் குளிர் பானங்கள் அருந்துபவர்கள் இருக்கின்றார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள் பல முறை பீடி, சிகரெட் புகைப்பவர்களும் இருக்கின்றார்கள்.
சதா வெற்றிலை பாக்குகளை வாயில் குதப்புபவர்களும், நேரம் காலம் பார்க்காமல் வயிறு புடைக்க உண்பவர்களும் இருக்கின்றார்கள்.
இறைவனின் கட்டளைப்படி இவர்கள் ஒருமாத
காலம் நோன்பு இருப்பதன் மூலம் டீ, காபி, வெற்றிலை, பாக்கு, புகை பழக்கம் போன்ற முறையற்ற பழக்கங்களுக்கு உடல் உட்படாமலும், நோயின்பால் ஈர்க்கப்படாமலும் நன்முறையில் புத்துணர்ச்சிப் பெற்று இயங்க ஆரம்பிக்கின்றது.
நோன்பு என்பது பசியை உணருவதற்காக அல்ல. அல்லது தண்ணீரையோ, பழங்களையோ சாப்பிட்டு விட்டு உணவு உண்ணாமல் இருப்பதல்ல.
சுமார் 12 மணிநேரம் வரை தண்ணீரோ, உணவோ உட்கொள்ளாமல் எந்த ஜீரண உறுப்புகளுக்கும் வேலை கொடுக்காமல் இருப்பது தான் சிறந்த நோன்பாகும்.
அப்போது தான் உடல் தன்னிடம் தேக்கிவைத்துள்ள சக்தியை (Stored Energy)
உடலின் இயக்கதிற்கு தக்கவாறு செலவிடும். (Ketosis).
அதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. உடலில் தங்கியுள்ள நோய்க் கழிவுகள் நீக்கப்படுகிறது. (Excretion of Viceral fats and Toxins).
ஆஸ்துமா, வீசிங் என்பது நுரையீரல் சம்மந்தப்பட்ட ஒரு நோயாகும். பெரும்பாலும் அதிகாலையில் பல ஆஸ்துமா நோயாளிகள் கஷ்டப்படுவதை பார்த்திருப்பீர்கள்.
அதிகாலை நேரத்தில் ஆஸ்துமா நோய் அவர்களை ஏன் எழுப்பிவிடுகிறது?.
சீன அக்குபங்சர் மருத்துவத்தின் தத்துவப்படி நமது உடல் உள் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட இயக்க நேரம் உள்ளது. (Biological Clock).
மனிதன் நாள் முமுவதும் சுவாசித்தாலும் அவனது நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.
நமது நுரையீரல் நாள் முழுவதும் இயங்குவதற்கான எனர்ஜியை அந்த நேரத்தில் தான் வெளிப்புற பிரபஞ்ச சக்தியிலிருந்து கிறகித்துகொள்கிறது. அதே வேளையில் நுரையீரல் தன்னிடம் உள்ள வியாதிகளையும் நீக்கிக் கொள்ள முயல்கிறது. அதனால் தான் ஆஸ்துமா நோய் அவர்களை அந்த அதிகாலை நேரத்தில் எழுப்பி விடுகிறது.
நாம் தூங்கும்பொது ஐம்புலன்களும் முமுமையாக இயங்காமல் இருக்கும். தூக்க நிலையில் நுரையீரல் இயங்குவதை விட விழித்திருக்கும் போது இயங்கும் சுவாசமானது நுரையீரலை நன்முறையில் புதிப்பிக்கின்றது.
இஸ்லாமிய பெருமக்கள் இறைவனின் கட்டளைப்படி நோன்பு காலங்களில் நோன்பு நோற்கவும், மற்ற நாட்களில் அதிகாலையில் தொழுகைக்கு (தஹஜ்ஜத், பஜர்) ஆயத்தமாவதும் தமது நுரையீரலை நன்முறையில் இயங்க வைக்க வேண்டும் என்கிற நல்ல தத்துவத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளாகும்.
நோன்பு வைப்பவர்கள் அதிகாலை வேலையில் நோன்பிற்கான உணவை (சஹர்) சாப்பிடுவார்கள். அதன் மூலம் நாம் வழக்கமாக உண்ணும் உணவின் நேரம் திசை திருப்பிவிடப்படுகிறது. இதனால் அனைத்து நோய்களுக்கும் காரணமான வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்ற நமது ஜீரண உறுப்புக்களில் அமில சுரப்புகள் குறைந்து அவ்வுறுப்புக்கள் வலுப்பெற்று வயிற்று உப்புசம், தலைவலி, தலைசுற்றல், புளித்த ஏப்பம், மயக்கம், வாந்தி, வயிற்று எரிச்சல், அடிக்கடி பசித்தல், மலச்சிக்கல் போன்ற பலவிதமான நோய் உபாதைகளிலிருந்து விடுதலை பெறுகிறோம்.
மேலும் நீண்டகால நோய்களுக்கு காரணமான உடலில் தேங்கியுள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன. நம் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன.
(Advanced Glycated End Products - AGEs)
சஹர் என்னும் அதிகாலை உணவு யாருக்கெல்லாம் சாப்பிடமுடியாமல் மயக்கம் ஏற்படுவது போலவும், வாந்தி வருவது போலவும் தோன்றுகிறதோ அவர்களுடைய ஜீரண உறுப்புகள் சக்தி இழந்து பித்தமும் அமிலமும் அதிகமாக தேக்கம் கொண்டுள்ளது என அறிந்துக் கொள்ளுங்கள். (அவர்களுக்கான மருந்தை கட்டுரையின் முடிவில் குறிப்பிட்டுள்ளேன்).
காலையிலிருந்து, மாலை நோன்பை முடிக்கும் நேரம் வரை அடக்கி வைத்திருக்கும் உணவின் ஆசையை நோன்பு முடித்து உணவு உண்ணும் நேரத்தில் கட்டுக்கடங்காமல் விட்டுவிடுவது நோன்பின் அடிப்படை காரணத்தையே தகர்த்துவிடும்.
நோன்பை முடிக்கும் தருவாயில் அதிகமாக பசியும், தாகமும் இருப்பது இயற்கை தான். அதை பின் வருமாறு கடைப்பிடிப்பது உடலுக்கு நல்லது.
நோன்பு திறக்கும் போது அமிலங்கள் சுரந்து வயிற்றில் நிறைந்து இருக்கும். அந்த அமிலங்களையும் வயிறு மற்றும் குடல்களில் உள்ள கசடுகளையும் நீக்கும் சக்தி வாய்ந்த மருந்து சுத்தமான தேன் ஆகும்.
இது வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்புசம், புளித்த ஏப்பம், உணவு எதுகளித்தல், விக்கல் போன்ற பலவிதமான உபாதைகளை நீக்குவதுடன் உடலுக்கு தேவையான சக்தியையும் கொடுக்கக்கூடியது.
நோன்பு திறக்கும் போது....
👉 பேரிச்சம் பழத்தை தேனுடன் நனைத்து நன்கு மென்று சாப்பிடுவது நல்லது.
👉 எலுமிச்சம் பழச் சாற்றில் ஐஸ், சர்க்கரை சேர்க்காமல் இனிப்புக்கு ஏற்றவாறு தேன் கலந்து மெல்ல மெல்ல பருகுவது நல்லது.
👉 எலுமிச்சம் பழச் சாற்றை விரும்பாதவர்கள் சாத்துக்குடி, அன்னாசி பழச்சாற்றை தேன் கலந்து சாப்பிடலாம்.
👉 சூடான பானங்களில் நோன்பு திறக்க விரும்புபவர்கள், காய்கறி சூப், கோழி சூப், ஆட்டு சூப் போன்றவைகளை காரம் சேர்க்காமல் சிறிது மிளகு, ஜீரகம் சேர்த்து உபயோகிக்க வேண்டும்.
👉 நோன்பு கஞ்சி கொண்டு நோன்பை திறப்பவர்கள் முதலில் பேரிச்சம் பழத்தை நன்றாக மென்று சாப்பிடுங்கள். அல்லது சிறு துண்டு பணை வெள்ளம் சாப்பிடலாம். இனிப்பு சுவை உங்கள் வயிற்றின் இயக்கத்தை தூண்டி ஜீரணத்தை நிலைபடுத்தக்கூடியது. எந்த உணவுக்கு முன்பும் சிறிது இயற்கையான இனிப்பு சாப்பிடுவது வயிற்றின் இயக்கத்திற்கு நல்லது.
👉 கஞ்சியுடன் பேரிச்சம் பழம், சிறிது தண்ணீர் தவிர வேறெந்த உணவையும் சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.
👉 தேனீர், காப்பியை தவிர்க்க முடியாதவர்கள் அரைமணி நேரம் கழித்து சாப்பிலாம்.
👉 எண்ணெய்யில் பொறித்தவைகளை அவசியம் நோன்பு திறக்கும் நேரத்தில் தவிர்த்துவிட வேண்டும். அவ்வாறு தவிர்க்க முடியாதவர்கள் எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, வடை, சமோசா போன்றவைகளை ஒரு மணி நேரம் கழித்து உண்ணுங்கள். அல்லது உணவு உண்ணும்போது சேர்த்து சாப்பிடுங்கள்.
👉 ஐஸ் மற்றும் குளிர்பானங்கள், சோடா, கோலா மற்றும் சீனி கலந்த பானங்களை பருகக் கூடாது.
மேலே சொல்லப்பட்ட பானங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பருகிவிட்டு சுமார் 45 நிமிடங்கள் வரை எந்த உணவும் உண்ணமால் இருக்க வேண்டும். இவ்வாறு சிறிது இடைவெளிக்குப் பிறகு மற்ற உணவுகளை உண்பதால் உணவு நன்கு ஜீரணிக்கப்பட்டு வயிற்று உபாதைகள் இல்லாமலும், இரவு நேர வணக்கத்தில் (தராவீஹ்) மயக்கம், தளர்ச்சி, சோர்வு, இல்லாமலும் உடல் நல்ல முறையில் இயங்கும்.
அதிகம் சாப்பிட நினைப்பவர்கள் உணவை 2 வேளையாக பிரித்து 7 மணிக்கு ஒரு வேளையும் 10 மணிக்கு இன்னொரு வேளையாகவும் சாப்பிடுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கஷ்டப்படுபவர்கள் சிறிது சிறிதாக கொஞ்சம் வெண்ணீர் அருந்தினால் ஜீரணத்திற்கேற்ப வயிறு பதப்பட்டுவிடும்.
வருடா வருடம் நோன்பு வைக்க நினைக்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை, எனது உடம்பு ஏற்றுக் கொள்ளவில்லை என நினைப்பவர்களும், வயிற்று உபாதைகள் உள்ளவர்களும்
NUX VOMICA - 200c என்கிற ஜெர்மன் ஹோமியோபதி மாத்திரை ஒன்றை 20 மில்லி தண்ணீரில் நன்கு கரைத்து இரவில் ஒருவேளை குடிக்கவும். ஒரே ஒரு வேலை குடித்தால் போதுமானது. தேவைப்பட்டால் பிறகு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு வேளை இதுபோல் இரவில் சாப்பிடலாம். இம்மருந்து வயிற்றி்ன் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். இம்மருந்து ஹோமியோபதி மெடிக்கல் கடைகளில் கிடைக்கும்.
மேற்கூறியவைகளை முறையாக கடைப்பிடிப்பதால் வருடம் முழுவதும் நோன்பு காலமாக இருக்காதா என உங்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாகும். இம்மாதம் வைக்கும் நோன்பிற்கும், இதுவரை நீங்கள் வைத்த நோன்பிற்கும், வித்தியாசங்களை நன்கு உணரமுடியும்.
மேலும் இறைவன் நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான உடலையும், தெளிவான மனதையும் கொடுத்து நோன்பின் நன்மைகள் அனைத்தையும் பெற அருள்புரிவானாக! நன்றி!.
Dr. Gouse. MD (Acu Tcm)., Singapore.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை அறிய kavimalaravan.blogspot.in என்னும் வலைப்பூவில் இணையுங்கள். நன்றி!
No comments:
Post a Comment