Tuesday, August 6, 2019

TNPSC-GROUP-IV| இலக்கணக் குறிப்பறிதல் - பொதுத்தமிழ் இலக்கணக் குறிப்பறிதல்

TNPSC-GROUP-IV| இலக்கணக் குறிப்பறிதல் - பொதுத்தமிழ்
இலக்கணக் குறிப்பறிதல்


பண்புத்தொகை

💢 பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகை எனப்படும். பண்புப்பெயரும், அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லிற்கும் இடையில் 'மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன எனும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

எ.கா
நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள் - வட்டம், சதுரம்
சுவையைக் குறிக்கும் சொற்கள் - இனிமை, கசப்பு
குணத்தைக் குறிக்கும் சொற்கள் - நன்மை, தீமை
எண்ணிக்கையைக் குறிக்கும் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

எ.கா 
வெண்கரடி - வெண்மை + கரடி
வட்டக்கோடு - வட்டம் + கோடு
பெருங்கடல் - பெருமை(பெரிய) + கடல்
செவ்வேள் - செம்மை + வேள்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

💢 இரண்டு பெயர்ச்சொற்கள் இணைத்து எழுதப்படும்போது அவற்றின் இடையில் 'ஆகிய" அல்லது 'ஆன" என்ற சொல் மறைந்து நின்று பொருள் தருவது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வரும்.


எ.கா 
தாமரை மலர் - இதில் தாமரை சிறப்புப் பெயர், மலர் பொதுப்பெயர் ஆகும்.
வெள்ளை மலர்(வெள்ளையான மலர்)
ஆண்மயில் (ஆணான மயில்)

வினைத்தொகை

💢 இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களும் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பது வினைத்தொகை எனப்படும். அதாவது வினைத்தொகையில் இரு சொற்களே இருக்கும். முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும். இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும்.

எ.கா
செய்வினை
செய்த வினை - இறந்தகாலம்
செய்கின்ற வினை - நிகழ்காலம்
செய்யும் வினை - எதிர்காலம்

வினைத்தொகையை கண்டறியும் முறை

💢 வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும். முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும், இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

எ.கா
சுடுசோறு
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு(எதிர்காலம்)

உவமைத்தொகை

💢 இரண்டு சொற்களுக்கு இடையே போல, போன்ற, அன்ன, நிகர என்னும் உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். உவமை முதலிலும், உவமேயம் பின்னும் வரும்.

எ.கா
கனிவாய், மலரடி
'கனிவாய்" என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானால் 'போன்ற" உருபு மறைந்து வருவதைக் காணலாம்.

எனவே 'கனிவாய்" என்பது உவமைத்தொகையாகும்.

No comments:

Post a Comment