Monday, March 6, 2017

ஒரு நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிக்கிடப்படுகிறது. ஜிடிபி (GDP) என்றால் என்ன? intermediary products என்றால் என்ன?


ஜிடிபி (GDP) என்றால் என்ன?

ஒவ்வொரு மூன்று மாத கால இறுதியிலும் நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை கூறுவதையும் நாட்டின் நிதி அமைச்சர் இனி வரும் காலங்களில் அது முன்னேறி எதிர்பார்த்த விழுக்காட்டை அடையும் என்று ஆரூடம் கூறுவதையும் கேட்டிருக்கிறோம்.

2005 முதல் 2010ம் ஆண்டு வரை எட்டு விழுக்காடாக இருந்து வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாககடந்த இரு ஆண்டுகளாக ஐந்திலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துவிட்டது என்கின்றன எதிர் கட்சிகள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிக்கிடப்படுகிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதனுடைய வயதை குறிப்பிடுவதல்ல.
ஆனால் அதுவல்ல ஒரு நாட்டின் வளர்ச்சி. உலக சந்தையில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்று குறிப்பிடுவது அதனுடைய பொருளாதார வளர்ச்சியைத்தான்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன அது எப்படி கணிக்கப்படுகிறது?
அதற்கு முன்பு உங்களுடைய குடும்பம் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று யாராவது நம்மை கேட்டால் நாம் அதை எவ்வாறு விளக்குவோம் என்று பார்ப்போம்.

சாதாரணமாக நம்முடைய குடும்ப பொருளாதார வளர்ச்சி என்பது நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்த நான் இப்போது சொந்த வீட்டில் வசிக்கிறேன், சைக்கிளில் சென்று வந்த நான் இப்போது நாற்சக்கர வாகனத்தில் செல்கிறேன் என்றால் என்னுடைய வருமானம் பெருகியுள்ளது என்றுதானே அர்த்தம்? இது என்னுடைய பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது என்று கூறலாம்இந்த வளர்ச்சியை அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த என்னுடைய ஆண்டு வருமானத்திற்கும் இப்போதுள்ள ஆண்டு வருமானத்திற்கும் இடையிலுள்ள நிகர வித்தியாசத்தை விழுக்காடு அடிப்படையில் கூறுவதைத்தான் வளர்ச்சி விகிதம் என்கிறோம். இதை AI (2013) - AI (2003)/100 என்ற சூத்திரத்தின் (formula) மூலம் எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்று கணக்கிடலாம்
.
இதே அடிப்படையில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் (Annual National Income) முந்தைய ஆண்டிற்கும் நடப்பு ஆண்டிற்கும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கணக்கிடமுடியும்.
ஒரு நாட்டிலுள்ளவர்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது ஒரு வகை. இதை ஆங்கிலத்தில் Income Method என்கிறார்கள்.

இதையே ஒரு நாட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களின் பொருளாதார மதிப்பை (economic value) கணக்கிடுவதன் மூலமும் கண்டுக்கொள்ள முடியும். இந்த கூட்டுத்தொகையைத்தான் Gross Domestic Products அல்லது GDP என்கிறார்கள். அதாவது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு. தயாரிப்பு என்கிறபோது ஒருநாட்டில் கிடைக்கும் அனைத்து சேவைகளின் (services) மதிப்பும் அடங்கும்.

ஒரு நாட்டின் GDP மூன்று வழிகளில் கணிக்கப்படுகிறது.

1. நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடுவது (மேலே பார்த்த Income Method),
2.நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களின் அடிப்படையில் கணக்கிடுவது (Expenditure Method),
3.நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் பொருளாதார மதிப்பின் அடிப்படையில் கணக்கிடுவது (Production Method)

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்தான் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுகின்றன.

இந்தியா உட்பட பல நாடுகளும் Expenditure Method பயன்படுத்துகின்றன.

இந்த முறையில் நாட்டிலுள்ள தனிநபர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் தொகையுடன் மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகையும் சேர்த்து உள்நாட்டில் செலவிடப்படும் ஒட்டுமொத்த தொகை கணக்கிடப்படுகிறது. அதனுடன் இம்மூன்று வகையினரும் செய்யும் முதலீட்டுத் தொகை (Investment) சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுத் தொகையிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கிடையிலுள்ள வித்தியாசத்தின் மதிப்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

இதை சூத்திரத்தில் GDP=C+I+G+(X-M) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் C தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் I இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் G அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் X நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் M இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது.
நம்முடைய நாட்டின் GDP மதிப்பு செலவினங்களின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது என்றாலும் இதையே Production Methodடிலும் கணக்கிடப்பட்டு இவ்விரண்டு முறைகளிலும் கிடைக்கும் முடிவை ஒப்பிட்டுப்பார்ப்பதும் உண்டு.
நம்முடைய நாட்டிலுள்ள அனைத்து உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு (value) என்பது நாட்டில் கிடைக்கும் அனைத்து சேவை (மருத்துவம், போக்குவரத்து என்பன போன்ற) களின் மதிப்பையும் உள்ளடக்கியதாகும். இதிலிருந்து ஒரு பொருளின் இறுதி வடிவத்தை அடைய பயன்படுத்தப்படும் பொருட்களின் (Intermediary prodcuts) மதிப்பை குறைத்துவிட்டால் நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு கிடைத்துவிடும்.

intermediary products என்றால் என்ன?

உதாரணத்திற்கு ஒரு ரொட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் கோதுமை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா, டால்டா அல்லது வெண்ணெய், உப்பு என்பன போன்ற பொருட்களைத்தான் intermediary products என்கிறார்கள். இவற்றை தனித்தனியாக மதிப்பிடாமல் இறுதி வடிவமான ரொட்டியின் (Bread) மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.
இதில் இயந்திரங்கள், இரும்பு போன்ற உலோகங்கள், கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் மற்றும் நம்முடைய தேவைக்கு பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் அடங்கும்.
இவற்றின் தயாரிப்பு அளவிகள் (Measures or Units) வெவ்வேறாக இருக்கும் என்பதால்தான் அவற்றின் பண மதிப்பை (Money/Economic Value)கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.
இதை அவற்றின் உற்பத்தி மதிப்பிலும் (Production Cost) அதன் சந்தை மதிப்பிலும் (Market Price) கணக்கிட்டு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. இரண்டு வகையிலும் கணக்கிடப்படும் மதிப்பு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?
ஆனால் ஒரு பொருள் அதன் உற்பத்தியாளரிடமிருந்து (Producer) நேராக அதன் நுகர்வோரிடம் (consumer) சென்றடைவதில்லை. சாதாரணமாக  பொருட்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கப்படும் விற்பனை வரி அல்லது சுங்க வரி விதிக்கின்றன. ஒரு சில பொருட்கள் மீது (.ம். சமையல் எரிவாயு) அரசாங்கம் மான்யம் வழங்குகிறது.
உதாரணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொள்வோம். நமக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டர் எரிவாயு தயாரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆகும் மொத்த செலவு ரூ.900 லிருந்து ரூ.1000 வரை ஆகிறது என்கிறார்கள். அதன் மீது மாநில அரசு விதிக்கும் வரியையும் சேர்க்கும்போது அதன் விலை ரூ.1050/- ஆகிறது. உற்பத்தி செலவான ஆயிரம் ரூபாயில் மத்திய அரசு மான்யமாக ரூ.600 வழங்குகிறது. ஆக, ஒரு எரிவாயு சிலிண்டர் அதன் நுகர்வோரை சென்றடையும்போது ரூ. 450/- என்ற நிலையை அடைகிறது (1000 + 50 - 600).
ஆனால் நாட்டின் GDP கணக்கிடும்போது உற்பத்தியாளர் வசமிருந்து அது சந்தைக்கு செல்லும்போது மதிப்பிடப்படும் மதிப்பைத்தான் எடுத்துக்கொள்வர். எரிவாயு சிலின்டர் எடுத்துக்காட்டில் அது ரூ.1000மாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகைகளிலும் கணக்கிடப்படும் நாட்டின் மொத்த வருமானம் ஒன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும்.

தனிநபர் ஜிடிபி (Per Capita GDP)

உலக நாடுகளை ஜிடிபி-யின் படி வரிசைப்படுத்தினால் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது, பத்தாவது இடத்தில ரஷியாவும், பதினொன்றாவது கனடா, பன்னிரண்டாவது ஆஸ்திரேலிய என உள்ளது நமக்கெல்லாம் தெரியும். இந்தியாவைவிட ரஷியா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் என்று. ஆக, ஜிடிபியை அடுத்து பொருளாதார முன்னேற்றத்தை அறிய நமக்கு வேறு ஒரு புள்ளிவிபரம் தேவைப்படுகிறது, அது தான் தனிநபர் ஜிடிபி.

எடுத்துக்காட்டாக லதா, மீனா ஆகிய இருவரின் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ரூ. 10,000 மாத வருமானம் பெறுகின்றன. இரு குடும்பங்களும் ஒரே பொருளாதார நிலையில் உள்ளனவா? லதா குடும்பத்தில் நான்கு நபர்கள், ஒவ்வொருவரும் சராசரியாக ரூ. 2,500 பெறுகின்றனர். மீனா குடும்பத்தில் ஐந்து நபர்கள், ஒவ்வொருவரும் சராசரியாக ரூ. 2,000 பெறுகின்றனர். சராசரி வருமானத்தை கணக்கிட்டால் பொருளாதாரத்தின் உண்மை நிலை தெரியவருகிறது. சராசரி வருமானத்தை எவ்வாறு கணக்கிட்டோம் மொத்த வருமானத்தை குடும்ப நபர்களின் எண்ணிக்கையால் வகுத்தால் சராசரி வருமானம் கிடைக்கும். இது போல, ஒரு நாட்டின் ஜிடிபியை அந்நாட்டின் மக்கள் தொகையால் வகுத்தால் தனிநபர் ஜிடிபி (Per Capita GDP) கிடைக்கும்.

நடப்பு நிலவரம்:

1.             பொருளாதார வளர்ச்சி என்பது பொருள்கள், சேவைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வில் ஏற்படும் வளர்ச்சி என்று பொருளாதார நூல்கள் வரையறுக்கின்றன.
2.             பொருள்கள் உற்பத்தியும் தனி நபர் நுகர்வும் அதிகரிக்கும்போது பொருளாதாரமும் அதிகரிக்கிறது.
3.             விவசாயம், மறு உற்பத்தி, உற்பத்தி, சேவைத் துறைகளுக்குத் தேவைப்படும் உற்பத்தி சாதனங்கள் மற்றும் கழிவு உற்பத்தி இவை அடங்கிய அனைத்தும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த முறையில் உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது.
4.             உண்மையான உள்நாட்டு மொத்த உற்பத்தி (gross domestic product- GDP) அதிகரிப்பு அல்லது தேசிய மொத்த உற்பத்தி அதிகரிப்பு இவற்றைக் கொண்டு பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக பெரும்பாலும், குறிப்பிடப்படுகிறது; மேலும் ;
5.             பல சமுதாயங்கள் மற்றும் பெரும்பாலான அரசுகளின் முதன்மையான, நீடித்த இலக்காக பொருளாதார வளர்ச்சி உள்ளது. மேலும் ;
6.             வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் கோட்பாடுகளின் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சிக்கு வரையறை உண்டு, மேலும் ;
7.             உலகப் பொருளாதார வளர்ச்சி, நீண்ட கால அடிப்படையில் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நலவாழ்வு ஆகியவற்றின் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதற்கான நிரூபணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன,

இந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கான காரணம்
1.             பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இருண்டிற்கும் இடையே அடிப்படை முரண்பாடு உள்ளது. (உதாணமாக பல்லுயிர்ப் பாதுகாப்பு, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான காற்று, நீர், சுற்றுப்புற உறுதித்தன்மை),

2.             மனிதப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கு இடையே அடிப்படை முரண்பாடு உள்ளது. (உதாரணமாக, மகரந்த சேர்க்கை, மக்குதல், தட்பவெப்ப நிலை கட்டுப்பாடு), 

3.             தொழில்நுட்ப முன்னேற்றம் பலவிதமான நேர்மறை மற்றும் எதிர்மறை சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இவை பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நலவாழ்வு இவற்றுக்கிடையே உள்ள தவிர்க்க முடியாத முரண்பாட்டைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

4.             அதிகரித்து வரும் உள்நாட்டு மொத்த உற்பத்தியைக் கொண்டு மதிப்பிடப்படும் பொருளாதார வளர்ச்சி, குறிப்பாக வலம் கொழிக்கும் பணக்கார நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி, அதிகரித்துவரும் ஆபத்தும் காலத்துக்குப் பொருந்தாததும் ஆகும்;

5.             ஒரு உறுதியான நிலையிலுள்ள பொருளாதாரம் (அதாவது, ஒப்பீட்டளவில் உறுதியான, மிதமான ஏற்ற இறக்கமுள்ள மக்கள் தொகை மற்றும் தனி நபர் நுகர்வு இவற்றுடன் கூடிய) என்பது வளர்ந்துவரும் பொருளாதாரத்திற்கு சாத்தியமான ஒரு மாற்று என்பதோடு பெரிய, வளமான பொருளாதாரங்களில் பொருத்தமான இலக்காகவும் மாறிவருகிறது
6.             வறட்சி மற்றும் ஆற்றல் பற்றாக்குறைகள் போன்ற எதிர்பார்த்த, எதிர்பாராத காலங்களில் பொருள்களின் உற்பத்தி ஸ்தம்பிக்கும் சூழல்களில் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலவரத்தில் ஏற்படக்கூடிய இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் பொருளாதாரம் சிறிய அளவில் நிறுவப்பட வேண்டும். இது நீண்ட காலம் நிலைத்திருக்கும் உறுதியான பொருளாதார நிலவரத்திற்குத் தேவையான ஒன்று

7.             ஒரு உறுதியான பொருளாதார நிலவரம் பொருளாதார வளர்ச்சியை தடுப்பதில்லை, இது உயிரோட்டமுள்ள, தரமான செயல்பாடு. இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதோடு மேலும் அது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரத் துறைகளும் உருவாகலாம்.

8.             உறுதியான பொருளாதார நிலையை உருவாக்க, பணக்கார நாடுகள் பொருளாதா வளர்ச்சி இலக்கு என்பதிலருந்து உறுதியான பொருளாதார நிலை என்ற இலக்கிற்கு மாறப் பிற நாடுகளுக்கு உதவலாம். தற்போது உயர் அளவிலான தனி நபர் நுகர்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் நாடுகளிலிருந்து இவற்றைத் தொடங்கலாம்.

9.             மிகப் பரவலாக வறுமை நிலவும் நாடுகளுக்கு, தனி நபர் நுகர்வு அதிகரிப்பு (அல்லது, மாற்றாக, மேலும் நியாயமான, சமமான செல்வப் பகிர்வு) என்பது பொருத்தமான இலக்காக உள்ளது.


பொருளாதார மந்தநிலை என்றால் என்ன?


"Recession" (பொருளாதார மந்தநிலை) என்பது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) சரிவை சந்திக்கும்போது ஏற்படும் தேக்கமாகும்.

         மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அளவிடக் கூடிய ஒரு அளவுகோல். உதாரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தால் அது பொருளாதார சரிவு.
        அமெரிக்கா போன்ற நாடுகளில் அதன் பொருளாதார வளர்ச்சியானது 1 சதவீதத்திலிருந்து -0.6 சதவீதமாக் குறைந்து அதே நிலையில் இரு காலாண்டுகள் இருந்தால் தான் அந்தச் சரிவை பொருளாதார மந்தநிலை என்று குறிப்பிடுகின்றனர்.
         GDP என்பது முதலீடுகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக வரவுகள், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. Recession என்ற சரிவுக் காலத்தில் இந்த அனைத்து துறைகளுமே சரிவில் இருக்கும். நாடு திவாலாகிவிடும் நிலைக்கு தள்ளப்படும். வேலை வாய்ப்பின்மையும் அதிகரிக்கும்.

பதிவிட்டது    
த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்


No comments:

Post a Comment